Saturday 21 July 2012

காயல்பட்டினத்தில் பழமையானக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு


காயல்பட்டிணம் - அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் பழங்காலக் கல்வெட்டுக்கள்
சங்க காலத்தில் காயல்பட்டிணம் தலைசிறந்த துறைமுகப்பட்டிணமாகத் திகழ்ந்தது.கொற்கையுடன் இணைந்து முத்து,வலம்புரிச்சங்கு,பஞ்சு,இரும்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்த வரலாற்றுச்சிறப்பினை உடையது.இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள்,வெளிநாட்டுக் காசுகள்,கருப்பு சிவப்பு பானை ஓடுகள்,வெளிநாட்டுப் பீங்கான் துண்டுகள் என பல பொருட்கள் கிடைத்து வருகின்றன. பாண்டிநாட்டிற்கான குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன.இவ்வூரில் மேற்கேப் பார்த்த சிவன் கோயிலும்  உள்ளது.துறைமுகநகரமாதலால் வைணவம், சைவம் எனப் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. மிகப் பெரிய வைணவக் கோயிலுக்குரிய கொடிமரம்,தேர்,தெப்பம் எனஅனைத்துச் சிறப்பியல்புகளுடன் திகழ்ந்த இக்கோயில் பல நூற்றாண்டுகளாக வழிபாடின்றிப்போனது. இக்கோயிலில் திருமாலின் பத்து அவதாரங்களும் கபோதகக் கூடுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.வெள்ளைக்கல்லால் இக்கோயிலின் அனைத்துப்பகுதிகளும் அமையப்பெற்றுள்ளன. உப்புக்காற்று,மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் இங்குள்ள கல்வெட்டுக்களும் பொறிந்து போயுள்ளன.தொடர்ச்சியாக அதன் பொருளை அறியமுடியவில்லை.
இடம்;அழகியமணவாளப் பெருமாள் கோயிலின் வடகிழக்கு மூலையிலுள்ள உற்சவ மேடைமேலேயுள்ள      சுவற்றில் 11 வரிகளில் உள்ளது.
காலம்; கி.பி.14 ஆம் நூற்றாண்டு
செய்தி;குட நாட்டு உதய மார்த்தாண்டன் பட்டினத்து நயினார் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலுக்குத் திருவிளக்கு ஏற்றிடவும்,நிவேதனம் செய்திடவும்,திருவிழா நடத்திடவும் வீரவளநாட்டில் வயலும் குளமும் தோட்டமும் கோயில் பூசாரியான மதுரைநம்பி என்பவருக்கு அரசன் கொடுத்த செய்தி உள்ளது.இக்கல்வெட்டு மூலம் காயல்பட்டிணம் உதயமார்த்தாண்டன்பட்டினம் என்ற பெயரில் விளங்கியது என்பதை அறிய முடிகிறது.கி.பி.1383 ஆம் ஆண்டினது சேரமன்னனான உதயமார்த்தாண்டனின் பலகைக் கல்வெட்டொன்று வீரபாண்டியன்பட்டினத்திற்கும் காயல்பட்டினத்திற்குமிடையேயுள்ள காட்டுமொகுதூம் பள்ளி அருகே உள்ள கல்வெட்டில், அங்கிருந்த பள்ளி ஒன்றை உதையமார்த்தாண்டன் பெரும்பள்ளி என்று கூறுகிறது.தற்போது அழகியமணவாளப்பெருமாள் கோயிலில் கிடைத்துள்ளக் கல்வெட்டு உதயமார்த்தாண்டனின் பெயரில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

1,2,3,.............................................................................................................
4.....நாள் குடநாட்டு உதய மாத்தாண்டன்பட்டினத்து நயினாரழகிய மணவாள
5.பெருமாள் நயினார்க்கு அரிசி கண்டு குடுத்து தளிகைக்கு
6.........ர்பித்த அமுதுபடி......பத்துக்கு...நானாழி.........................................
7...............ராஜியத்து.....................................................................................
8..............................................................................................................
9.ததுப்படிக்கு வகையாக...கொண்டுகந்த வளநாடான வீரவள நாட்டு
10....குளமும் புரவுங்கொண்டு.........மாதத்து திருவிள.............................
11.........................மதுரைகைநம்பி நடத்தும்படி கர்பித்தது......................


 

புதையல் கல்வெட்டு எண்-2
இடம்; கோயில் மகா மண்டபத்தின் தெற்கு வெளிப்புறச்சுவர்
காலம்; கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
செய்தி; இக்கோயிலில் புதையல் வைக்கப்பட்டச் செய்தி        உள்ளது

 1. தனந்தோன்ற வைத்துப் பு
 2. தைத்திருந்தார்கள்

கல்வெட்டு எண்-3


இடம்; மகாமண்டபத்தின் தெற்கு வெளிப்புறம் ஜெகதிப்பகுதி
காலம்; கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
செய்தி; இராசன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.


 1.இராசன்


காயல்பட்டினத்தில் தொல்லியல் தடயங்கள்



காயற்பட்டினம் சங்ககாலத்தில் சோனகர்பட்டினம், பவித்திரமாணிக்கப்பட்டினம்,உதயமார்த்தாண்டன் பட்டினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.இவ்வூர் சென்ற நூற்றாண்டுவரை கடல்வழி வணிகத்தில் சிறப்புடன் விளங்கியது.இவ்வூர் கருப்புடையார்ப்பள்ளிப் பகுதியில் கடற்கரை அருகே மணற்பரப்பில் திரு பிரபு சுல்த்தான் என்பவர் தொல்லியல் தடயங்கள் சிலவற்றைச் சேகரித்துள்ளார்.அவை இடைக்கால மண் பானை ஓடுகல்,பீங்கான் ஓடுகள்,கெண்டி மூக்குகள்,சிறு அகல் விளக்குகள்,சுடுமண் நீள்மணி,சில்லுவட்டுகள், பிற்காலப்பாண்டியர் காசு ஆகியனவாகும்.4 செ.மீ.நீளமும் நடுப்பகுதியில் 1 செ.மீ. கனமும் உடையதாக உட் துளையுடன் உள்ள சுடுமண் அணிமணி குறிப்பிடத்தக்கதாகும்.பானை ஓடுகளில் ஓலைப்பதிவுகள் உள்ளன.கிடைத்துள்ளச் செப்புக்காசு 1 செ.மீ. விட்டமுடையதாகும்.ஒருபுறம் மன்னர் அமர்ந்தநிலையில்மலர் நுகரும் தோற்றம்.மன்னனின் இடதுபுறம் ‘கு’என்ற 13 ஆம் நூற்றாண்ட்டு எழுத்து வடிவம் தெரிகிறது. இதைப் பாண்டியமன்னன் குலசேகரன் காசாகக் கருதலாம்.இக்காசின் பின்புறம் உருவத்தின் உடல்பகுதி சிதைந்துள்ளது.

0 comments:

Post a Comment